1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வெ‌ளியே‌ற்ற‌க் கூடாது : என்.வரதராஜன்!

கோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்வரதராஜன்
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும் என்றமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதுகுறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு 9-11-2007இல் கோவில் நிலங்களில் குடியிருப்போர் அடிமனை வாடகை நிர்ணயம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் வாடகை விகிதங்கள் நிலத்தில் சந்தை மதிப்பில் 0.2 ‌விழு‌க்காடு 0.1 ‌விழு‌க்காடாக குறைத்து, அதே நேரத்தில் 1-8-1998 முதல் நிலுவைத் தொகை கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் மாத வாடகையாக பல ஆயிரங்களும், நிலுவையாக பல லட்சம் ரூபாயும் கட்ட வேண்டியுள்ளது. கட்ட முடியாத சூழ்நிலையில் அவர்களுடைய வாடகை பத்திரத்தை ரத்து செய்து அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக அறிவித்து 30 நாட்களுக்குள் வீட்டை உரிய கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் காவ‌ல்துறை உதவியுடன் இடத்தை கைப்பற்றுவோம் என கோவில் நிர்வாகம் அச்சுறுத்தல் நோட்டீசுகளை குடியிருப்பவர்களுக்கு அனுப்பி வருகிறது.

இதனால் கடந்த மூன்று, நான்கு தலை முறையாக தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டி வாழும் லட்சக்கணக்கானவர்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக 6-10-2008 அன்று முத‌ல்வ‌ர் கருணாநிதியை சந்தித்தபோது, கோவிலுக்கு சொந்தமான இடங்களை அரசே கையகப்படுத்தி, அதனை வறுமை கோட்டிற்கு கீழே குடியிருப்பவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தும் அவர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதுவரை வழக்குகள் தொடர்ந்து, அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது.

மேலும் அவர்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற கூடாது எனவும் தெரிவித்தபோது அப்படி யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது நடைமுறையில் அறநிலையத்துறை, தினசரி நோட்டீசுகளை அனுப்பி வீட்டை ஒப்படைக்க வலியுறுத்தி குடியிருப்பவர்களை வெளியேற்ற முயற்சிக்கின்றது.

எனவே, ஏற்கனவே முத‌‌ல்வ‌ர் கருணாநிதியிடம் எடுத்துரைத்தபடி இந்த நிலங்களை கையகப்படுத்தி குடியிருப்பவர்களுக்கு வழங்க ஒரு குழுவை அறிவிக்கவும், அதுவரை அவர்களை வெளியேற்ற எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி வைக்க முத‌‌ல்வ‌ரகருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.