Anna Hazare is symbol of People's rage against corruption: Era Sezhian | மக்கள் கோவத்தின் அடையாளமே அண்ணா ஹசாரே
இரா.செழியனுடன் நேர்காணல்
FILE
அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ள இரா.செழியன், ஜன் லோக்பால் சட்டத்திற்கு உள்ள அவசியத்தை வலியுறுத்த தமிழ்.வெப்துனியா.காம் ஆசிரியர் கா.அய்யநாதனுடன் பேசினார்.
தமிழ்.வெப்துனியா.காம்: ஊழலிற்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு தென் மாநிலங்களில் அந்த அளவிற்கு ஆதரவற்ற நிலையில், தாங்கள் முன்சென்று ஆதரவளித்திருப்பது அந்தப் போராட்டத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், அதன் அவசியம் என்ன?
FILE
இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். 1969ஆம் ஆண்டு முதல் ஊழல் ஒழிக்க உருவாக்கப்பட்ட லோக்பால் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் 10 முறை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், அது ஒரு அதிகாரமிக்க, முழுமையான சட்டமாக அறிமுகப்படுத்தப்படவும் இல்லை, நிறைவேற்றப்படவும் இல்லை. இதுவே அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் ஊழலிற்கு எதிரான ஒரு அதிகாரமிக்கச் சட்டத்திற்கான ஆதரவை உருவாக்கியுள்ளது.
FILE
இந்தப் போராட்டத்தின் நோக்கம் இப்போதுள்ள அரசை பதவியில் இருந்து இறக்குவதல்ல, ஆனால், ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஒடுக்குவது என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் மக்களின் கவனம் இந்தப் போராட்டத்தின் மீது ஒருங்கிணைவதைத் தடுக்க அது திசைதிருப்பும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.
உள்ளபடியே மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகத் தங்கள் அரசு உள்ளதென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்புமானால், அது இப்பிரச்சனையை மையமாக வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் அல்லது தாங்கள் உருவாக்கிய லோக் பால் சட்ட வரைவின் மீது பொது மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
தமிழ்.வெப்துனியா.காம்: அண்ணா ஹசாரே அணியினர் உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் வரைவு சட்டமாக்கப்பட்டால் இந்த நாட்டில் ஊழல் ஒழிந்துவிடுமா?
இரா.செழியன்: ஊழலற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் செல்லவதற்கு அப்படிப்பட்ட ஒரு சட்டம் அவசியமாகும். அதன் பிறகு அதனை உண்மையாக நடைமுறைப்படுத்தக்கூடிய வலிமையான அரசு வேண்டும். அதுமட்டுமின்றி, மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்கக்கூடிய அந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.
நல்ல அரசமைப்பு இருந்தால் மட்டுமே போதுமானதல்ல, அதில் 80% ஜனநாயக அமைப்புகளை காப்பதாகக் கூட இருக்கலாம். ஆனால் உண்மையான ஜனநாயகம் என்பது அமைப்பு ரீதியாகத் திரளும் மக்களின் தொடர்ந்த விழிப்புணர்வின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
