1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
  6. சுரங்க ஊழலே இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்: சஜ்ஜன் ஜிண்டால்

Mining is the biggest scam in our country: Sajjan Jindal | சுரங்க ஊழலே இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்: சஜ்ஜன் ஜிண்டால்

சுரங்கக் கொள்ளை கொள்கை சஜ்ஜன் ஜிண்டால் கனிம வளம் இரும்புத் தாது
FILE
இரும்புத் தாது, பாக்சைட் என்று நமது நாட்டின் கனிம வளங்களை சுரங்கம் அமைத்துத் தோண்டி விற்பதில் மிகப் பெரிய ஊழல் நடந்து வருகிறது, அது எந்த நேரமும் வெடிக்கலாம், அதுவே இந்த நாட்டின் மிகப் பெரிய ஊழலாக இருக்கும் என்று எஃகுத் தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

கனிம வளம் உள்ள இடங்களில் சுரங்கம் அமைத்து, வெட்டியெடுக்கப்படும் வளத்தை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம், ஏற்றுமதி செய்யலாம். மிகக் குறைந்த விலையை மட்டுமே கொடுத்துவிட்டு, மிகப் பெரிய அளவிற்கு சம்பாதிக்கின்றனர். இந்த ஊழல் குறித்து யாரும் பேசாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்றும் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

மராட்டிய மாநிலம் விஜய் நகரில் இயங்கிவரும் இஸ்பாட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் நிறுவனமும் இணையும் ஒப்பந்தத்தில் இஸ்பாட்டின் துணைத் தலைவர் வினோத் மிட்டலும், ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவருமான சஜ்ஜன் ஜிண்டாலும் இன்று கையெழுத்திட்டனர். இந்த நிகழ்விற்குப் பிறகு இவ்விருவரும் ஒன்றினைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அந்தப் பேட்டியில் சஜ்ஜன் ஜிண்டால் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எந்த நேரமும் வெடிக்கலாம

இரும்பு உருக்காலைக்கான கச்சா பொருளிற்காகவே இந்த தொழில் ரீதியான ஒப்பந்தம் தேவைப்படுகிறது அல்லவா என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சஜ்ஜன் ஜிண்டால், “ஆம். இதனை நான் நமது நாட்டின் துரதிருஷ்டம் என்பேன். இந்த நாட்டின் மிகப் பெரிய எஃகு உற்பத்தியாளருக்குத் தேவையான கச்சா பொருள் பெறுவதற்கு வழியில்லை. இது நமது கொள்கையின் பலவீனத்தையே காட்டுகிறது. இதனை சரிசெய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால்தான் சுரங்கங்கள் ஊழலின் மிகப் பெரும் ஊற்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதுதான் இன்றைக்கு இரும்பு, எஃகு தொழில் எதிர்கொ்ண்டுவரும் மிகப்பெரிய சிக்கல் என்று கூறலாமா? என்று கேட்டதற்கு, “ஆம். இந்தச் சிக்கலின் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. தற்போது கொதித்துக் கொண்டிருக்கும் இந்த ஊழல் எந்த நேரமும் வெடிக்கலாம். இன்னும் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ வெடிக்கலாம். அது வெடிக்கும் என்று கடந்த 5 ஆண்டுகளாக நான் காத்திருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஊழலிற்குப் பிறகு சுரங்க ஊழல் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டதற்கு, “இதுவே நமது நாட்டின் மிகப் பெரிய ஊழலாகும். நாம் 2ஜி, காமன்வெல்த் என்று பேசிக்கொண்டிருகின்றோம். சுரங்க ஊழல் பற்றி யாரும் பேசுவதில்லை. வணிகர்கள் - அரசியல்வாதிகள் கூட்டணியில் இந்த நாட்டில் நடந்துக்கொண்டிருக்கும் மிகப் பெரிய ஊழல் இது, இதனை சரிசெய்ய அரசு பெரிதாக எதையும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய சுரங்கக் கொள்கையிலும் இதனைத் தடுக்க எதுவும் இல்லை. என்றைக்கோ வடிக்கப்பட்ட பழமையான கொள்கை இது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றாலும் ஒன்றும் நடக்காது. இதனால் எங்களைப் போன்ற நேர்மையான நிறுவனங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். கர்நாடகா, ஒரிசா, சட்டீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் என்று எல்லா மாநிலங்களிலும் இந்த ஊழல் நடக்கிறது, ஆனால் யாரும் அதுபற்றி பேசவில்லை. சில நேரங்களில் தலையெடுக்கிறது, பிறகு அழுத்தப்பட்டுவிடுகிறது. ஏனெனில் இது மிகப்பெரிய கூட்டணியால் நடத்தப்படுகிறது. அதனால்தான் யாரும் பேசுவதில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த அரசு ஏன் சரிசெய்யவில்லை?

“இந்த அரசு அதனை தூய்மைபடுத்தும் என்று எதிர்பார்த்தேன். இன்றுள்ள சுரங்கச் சட்டம் முழுமையாக ஊழலிற்கு உரியது. அதன் எந்தப் பிரிவை எடுத்துக்கொண்டாலும் ஊழல்தான். ஏனெனில் மிகச் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம். சுரங்க அமைத்து, தோண்டியெடுக்கும் எதுவானாலும் அதனை நீங்கள் எங்கு வேண்டுமாலும் விற்கலாம். மிகக் குறைந்த விலையில் இங்கு இது நடக்கிறது. மிகச் சுலபமாக சம்பாதிக்கின்றனர். இவ்வளவு சுலபமாக சம்பாதித்த பணத்தை இங்கேயே முதலீடு செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் அரசியல்வாதியாகலாம். தேர்தலில் செலவு செய்து வெற்றி பெற்று அரசியல்வாதியாகலாம். சட்டப் பேரவைக்குப் போகலாம், மக்களவைக்குப் போகலாம். அதன் பிறகு என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதனை செய்யலாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதனைச் செய்யும் என்று முதலில் எதிர்பார்த்தேன், நடக்கவில்லை. இரண்டாவது தடவையாக பதவியேற்றப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்த்தேன, இதுவரை நடக்கவில்லை. அது ஏன் நடக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

FILE
சஜ்ஜன் ஜிண்டால் கூறியதையெல்லாம் பல மனித உரிமை அமைப்புகள் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கூறிவருகின்றன. சுரங்கம் அமைத்து எடுக்கப்படும் இரும்புத் தாதுவிற்கு டன் ஒன்றிற்கு சில நூறு ரூபாய்களை உரியமாகக் (ராயல்டி) கொடுத்துவிட்டு, அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று பயனடைகிறார்கள் என்று சட்டீஸ்கர் மாநிலம் தாண்டிவாடாவில் பழங்குடியின மக்களை துரத்தியடிக்கும் பிரச்சனை குறித்து சென்னையில் பேசிய காந்தியவாதி ஹிமான்சு குமார் கூறியிருந்தார். இதையே சுரங்கக் கொள்ளை என்ற அனைவரும் வர்ணித்துவருகின்றனர். அதனை சுரங்க ஊழல் என்று சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார் என்பதே ஒரே ஒரு வேறுபாடாகும்.
About Writer
Webdunia