1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

சிங்கூரில் சாலை மறியல்!

சிங்கூரில் சாலை மறியல்
சிங்கூர்: டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை திறக்க கோரி, சிங்கூரில் இன்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

டாடா நிறுவனம் வெளியேற கூடாது எனவும், நானோ கார் தொழிற்சாலை மீண்டும் இயங்க வேண்டும் என்றும் கூறி முழு அழைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த தொழிற்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் சிலரும், இதன் கட்டுமான பணிக்கு பொருட்களை வழங்குபவர்களும் நேற்று இரவு 9 மணி முதல் துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜாய்முல்லா (Joymolla) அருகே மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டனர்.

இத்துடன் டயர்களையும் எரித்தனர். இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்துடன் இவர்கள் சாலையின் குறுக்கே பள்ளத்தை வெட்டினார்கள். தன்டிபாரா (Tantipara) என்ற கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையை தோண்டி போக்குவரத்து நடைபெறமால் செய்தனர். இதனால் அந்த கிராமம், மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் சிங்கூர், கமர்குண்டு ரயில் நிலையங்களில் இருப்பு பாதைகளில் தடையை ஏற்படுத்தி ரயில் போக்குவரத்தைத் தடுக்க முயன்றனர். பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தண்டவாளத்தில் ஏற்படுத்தி இருந்த தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், பிச்ராம் முன்னா தலைமையிலான சிங்கூர் கிருஷி ஜமி ரக்ச குழு (Singur Krishi Jami Raksha Committee) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இங்கிருந்து டாடா நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்து விட்டது. நாங்கள் கொடுத்த நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

சிங்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரபிநிதிரநாத் பட்டாச்சார்யா, சிங்கூரில் இருந்து டாடா வெளியேறியதற்கு முழு காரணம், மாநில அரசு தான் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம், மாநில அரசு அதன் பொறுப்புகளை தட்டிக் கழித்ததுதான். ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி முன்னிலையில் ஏற்பட்ட 300 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கும் ஒப்பந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் ஒரு போதும் மேற்கு வங்கத்தை விட்டு கார் தொழிற்சாலை வெளியேற வேண்டும் என்று கூறவில்லை. நாங்கள் தொழிலும், விவசாயத்திற்கும் இடையே ஒருங்கினைப்பு இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம் என்று கூறினார்.

இந்த பகுதியில் பதற்றத்தைத் தணிக்க பெரும் எண்ணிக்கையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏதோவது விரும்பதகாத சம்பவங்கள் நடதால் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.