தங்கையை கொன்று, சடலம் அருகே மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்த சகோதரன்.. பின்னர் போலீசில் சரண்.. என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசம், கோரக்பூரை சேர்ந்த ஆதித்யா யாதவ் என்பவர், தனது 19 வயது தங்கை நித்யா யாதவின் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவளை வாய்க்காலில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவியான நித்யா, மூன்று ஆண்டுகளாக ஒரு இளைஞருடன் உறவில் இருந்ததோடு, திருமணத்தின் அடையாளமான குங்குமத்தையும் அணிந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் ஆதித்யா, சமாதானப்படுத்த முயன்றதில் தோல்வி அடைந்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய நித்யாவை, திங்கட்கிழமை அன்று ஆதித்யா சமாதானப்படுத்தி அழைத்து வந்தபோது, அவள் தனது காதலில் உறுதியாக இருந்தாள். ஆத்திரமடைந்த ஆதித்யா, அவளை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று தாக்கி, பின்னர் வாய்க்காலில் தள்ளி மூழ்கடித்துக் கொன்றார்.
கொலைக்கு பிறகு, தங்கை உடலுக்கு அருகில் ஒன்றரை மணி நேரம் அமர்ந்திருந்த ஆதித்யா, பின்னர் தானே போலீஸை அழைத்து சரணடைந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு, கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்த ஆதித்யா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
Edited by Mahendran