ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேநபர் மன நல பாதிப்பில் உள்ளாரா? பெரும் நிதிச்சிக்கல் வேறு..!
கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேர் பலியான நிலையில், இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே நபர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் விஸ்வாஸ் குமார் ரமேஷ் தனக்கு விரிவான நலத்திட்ட உதவி கோரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்தில் தனது சகோதரரை இழந்த குமார், தான் மனதளவில் நொறுங்கிவிட்டதாக கூறி, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நல பாதிப்புகள் மற்றும் முடங்கிய தொழிலால் அவரது குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது.
குமாரின் வழக்கறிஞர் ராட் சீகர், ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சனை நேரில் சந்தித்து, வழங்கப்பட்ட £21,500 இடைக்கால இழப்பீடு போதாது என்று கூறி, ஒரு விரிவான நலத்திட்ட உதவியை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஏர் இந்தியா, குமாருக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், அவரது பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. விபத்துக்கான முதற்கட்ட காரணம், விமானம் புறப்பட்ட பின் எஞ்சின்களுக்கான எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதுதான் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.
Edited by Siva