சந்திர கிரகணத்திற்கு பிறகு அதிகரித்த பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் உண்டியல் வருமானம் உயர்வு
சந்திர கிரகணம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் வருகை மிகவும் குறைந்திருந்தது. எனினும், சந்திர கிரகணம் முடிந்த பின்னர், கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று, 70,828 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதில், இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், திருப்பதி மலைப் பகுதியில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பக்தர்களின் வருகை அதிகரித்ததன் விளைவாக, உண்டியல் வருமானமும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், கோயில் உண்டியல் காணிக்கையாக ₹3.07 கோடி வசூலாகியுள்ளது. வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran