Old Goa remains memorable as ever | மாறாத பழைய கோவாவும், அழகிய தேவாலயங்களும்
K. AYYANATHAN
அதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.
K. AYYANATHAN |
அவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
K. AYYANATHAN |
அரபிக் கடலையொட்டியுள்ள இந்தக் கடற்கரைகளில் மாலை வேளைகளில் - அதுவும் தங்கள் அன்பு இணையுடன் பொழுதைக் கழிப்பதில் மயங்காத அயல் நாட்டு நெஞ்சங்களே இல்லை எனலாம். சூரியன் மறையும் வேளை மிகவும் அழகானதாகும். ‘குடி’ மகன்களுக்கு இந்த நேரம் அலாதியானது.
வெறும் 15 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமான கோவா, அரபிக் கடலிற்கும், மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும் இடையே அமைந்துள்ளதால் அதன் இயற்கை எழில் மட்டுமின்றி, இங்கு வாழும் மக்களும் பண்பாட்டளவில் மிகவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் தனித்தன்மையுடன் உள்ளது.
கடற்கரை மட்டுமின்றி, இந்த அழகிய மாநிலத்தை திராகோல், சாபோரா, மாண்டோவி, ஜூவாரி, சால், தால்போன் ஆகிய ஆறுகளும் செழுமைப்படுத்துகின்றன. பழைய கோவாவையும், புதிய கோவாவையும் மாண்டோவி (இதனை மண்டோதரி என்றும் கூறுகின்றனர்) ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றில் அந்தி சாயும் பொழுதில் பெரும் படகுகளில் மிதந்துகொண்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் பெரிதாக நடக்கிறது.
இயற்கை எழிலை அழித்த முன்னேற்றம்
33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன. இதில் கோவாவின் அழகிய சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு அழகிய ஓவியம் போல் கோவா தோற்றமளித்தது. ஆனால், இன்று வானளாவிய கட்டடங்களும், அகலமான விரைவு சாலைகளும் அந்த எழிலை அழித்துவிட்டன. ஆனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏற்பட்ட ‘முன்னேற்ற’ மாற்றத்தினால் சற்றும் தன்னை இழக்காமல் இருப்பது பழைய கோவாதான். பரபரப்பற்ற சாலைகளும், நிதானமான மக்கள் போக்கும், வரலாற்றை சுமந்து நிற்கும் தேவாலயங்களும், அதனையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளும் மனதிற்கு அதே மகிழ்வைத் தருகின்றன.
K. AYYANATHAN
கோவாவிலுள்ள தேவாலயங்களில் மிகவும் பழைமையானதும், மிகுந்த போற்றுதலிற்குரிய கட்டடக்கலைச் சான்றாகவும் திகழும் இந்த தேவாலயம், குழந்தை ஏசுவிற்கானதாகும். மிக உயர்ந்த விதானமும், அழகியச் சிற்பங்களைக் கொண்டதுமான இந்த தேவாலத்தின் உள்ளே சென்றால், உள்ளரங்கின் உச்சத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். அனைத்தும் மரத்தில் செதுக்கப்பட்டவை. உயர்ந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ள மாடங்களில் குழந்தை ஏசுவுடன் மரியா இருக்கும் காட்சியும், மற்ற மாடங்களில் தேவதைகளின் சிறபங்களும் வடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேவாலயத்தில்தான் புனித ஃபிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாயலத்தில் ஒரு கூடத்தில் மாட்டப்பட்டுள்ள ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.
புனித ஃபிரான்சிஸ் தேவாலயம்
K. AYYANATHAN |
போம் ஜூசஸ் தேவாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கது புனித ஃபிரான்சிஸ் அசிசி தேவாலயம் ஆகும். 1517இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த மாடங்களுடன் கூடிய பிரம்மாண்டமான தோற்றத்துடன் கூடியது. இந்தத் தேவாலயத்தின் உட்புறமும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் சான்றாக உள்ளன.
இவை மட்டுமின்றி, நமது ரோசரி அன்னை தேவாலயம், புனித கதீட்ரல், புனித அகஸ்டின் (இப்போது இடிந்து சிதைந்து ஒரு பக்கம் மட்டுமே நிற்கிறது) ஆகியனவும் கலை, வரலாற்றுப் பெருமைமிக்க தேவாலயங்களாகும்.
கோவாவிலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். கோவா செல்லும் சுற்றுலா பயணிகள், அதன் மெய்யான அமைதி சூழலை அனுபவிக்க வேண்டுமெனில், இங்குதான் தங்க வேண்டும். தங்கு விடுதிகளின் வாடகையும் இங்கு குறைவு. புதிய கோவாவிற்கு போனால், ஆயிரம் ரூபாய்ககு நூறு ரூபாய் மதிப்புதான் இருக்கும் என்பதை அறிக.
FILE
மற்ற எந்த ஒரு சுற்றுலாத் தலத்தையும் விட, கோவா கொண்டிருக்கும் சிறப்புத் தன்மை யாதெனில், இங்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கலாம். தங்குவதற்கு மட்டும் மற்ற சுற்றுலாத் தலங்களை விட இங்கு கூடுதலாக செலவாகிறது.
கோவா மாநில அரசு இயக்கும் சுற்றுலா பேருந்துகள், மிகக் குறைந்த கட்டணத்தில் கோவா முழுவதையும் நமக்கு சுற்றிக்காட்டுகிறது. வசதியிருந்தால், தனியாக வாகனம் எடுத்துக்கொண்டு சென்று நினைத்த இடத்தில் அதிக நேரத்தை செலவிடலாம். அப்படி நேரத்தை செலவிட்டு பெரும் அனுபவம் என்றென்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்.
