தனம் - விமர்சனம்!
|
தனம் படத்தில் சங்கீதாவின் பாலியல் தொழிலாளி வேடமும், சினிமா யதார்த்தத்தை ஒட்டியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இறக்கி கட்டிய சேலை, இதழோரம் வெற்றிலைச் சாறு, இளமையை விலைபேசும் கண்கள்... இப்படியா இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளிகள்? தோற்றத்தில் உள்ள இந்த சினிமா யதார்த்தம் கதையிலும்.
ஹைதராபாத் காந்தி நகர் பாலியல் தொழிலாளி சங்கீதா மீது படிப்பதற்காக ஹைதராபாத் வரும் பிரேமுக்கு காதல். உன் குடும்பத்தினர் சம்மதித்தால் தாலி கட்டிக்கொள்ள சம்மதம் என்கிறார் சங்கீதா. பிரேமின் காதலை எதிர்க்கிறார்கள். அவர்களின் குடும்ப ஜோதிடர் கோட்டா சீனிவாச ராவ், சங்கீதா குடும்பத்தில் வந்தால் தனம் கொழிக்கும் என்று சொல்ல, பிரேமின் குடும்பம் சங்கீதாவை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறது.
திருந்தி வாழும் சங்கீதாவை தீண்டப் பார்க்கிறார் கோட்டா. சங்கீதா மறுக்கிறார். இது ஒருபுறமிருக்க சங்கீதாவுக்கு குழந்தை பிறக்கிறது. ஆசைக்கு இணங்க மறுக்கும் சங்கீதாவை பழிவாங்க, அவரது குழந்தையால் குடும்பத்தில் அழிவு வரும், அதனை கொலை செய்வதே ஒரே தீர்வு என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் கோட்டா. ஜோசியரின் வாக்கை தெய்வ வாக்காக கருதும் பிரேமின் குடும்பம் குழந்தையைக் கொலை செய்கிறது. குழந்தையை கொன்றவர்களை சங்கீதா பழிவாங்குகிறார்.
|
கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரங்கள் வாயிலாக பிராமணர்கள் மீது அழுத்தமான விமர்சனத்தை முன்வைக்கிறார் இயக்குனர். அதிகபடியான விமர்சனம் என்பதை முன்வரிசை ரசிகர்களே சொல்லிவிடுகிறார்கள்.
இளையராஜா (இசை), தோட்டாதரணி (கலை), சீனிவாஸ் தேவாம்சம் (ஒளிப்பதிவு) ஆகியோர் தனத்தின் உண்மையான தனங்கள்.
கனமான கதை நாடகத்தனமான வெளிப்பாட்டால் கவனம் கவர மறுக்கிறது.
