1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 6 ஜூன் 2015 (16:21 IST)

இலங்கையில் இன நல்லிணக்கமா, அது எப்போது இருந்தது? - ஆளுங்கட்சி உறுப்பினர் கேள்வி

இலங்கையில் எப்போது நல்லிணக்கம் இருந்தது ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, ”சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 67 வருடங்கள் ஆகின்றது. ஆனால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அரைகுறை தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பிரச்சினைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார்கள்.
 
பெரும்பான்மையினருக்கு பாவமன்னிப்பு வழங்குவதா? இல்லையா என்று தமிழினம் தான் முடிவெடுக்க வேண்டும். இதில் குறுக்கிட்டு செயற்படும் தரகர்கள் தேவையில்லை. தமிழ் மக்களின் தலைவிதியை விளையாட்டாக நினைத்து சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த விடயத்தில் தரகர்களாக செயற்படுகின்றன.
 
இவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்த ஒரு சிலரும் செயற்படுகின்றனர். தரகர்களை நம்பி அரைகுறை தீர்வை முன்னெடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பான பிழையான செய்தியை உலகுக்கு காட்டவேண்டாம். சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கோரும் காலம் விரைவில் ஏற்படும்” என்றார்.