வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 மே 2015 (20:00 IST)

போரில் சரணடைந்து காணாமற்போன 110 விடுதலைப் புலிகளின் விபரங்களை வெளியிட்டது ஐநா

போரின் முடிவில் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட 110 விடுதலைப் புலிகளின் விபரங்களை ஐநா வெளியிட்டுள்ளது.
 
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த, நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தவரான, யஸ்மின் சூகா தலைமையிலான ’அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் - இலங்கை’ என்ற அமைப்பினால், இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 

 
2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் இலங்கை ராணுவத்தினரிடம் இவர்கள் சரணடைந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், அவர்களில் பலரும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாகவும், யஸ்மின் சூகாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
குறித்த நாளில் 100க்கும் அதிகமாக விடுதலைப் புலிகளின் இராணுவ, சிவில் நிர்வாக, தலைவர்கள் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்ததை பெருமளவிலான சாட்சிகள் கண்டுள்ளனர். கடைசியாக சாட்சிகள் காணும் போது, இலங்கை ராணுவத்தினரின் தடுப்பில் இருந்த இவர்களில் பெருமளவானோர் காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளனர்.
 
வெள்ளமுள்ளிவாய்க்கால் பாலத்துக்கு தெற்குப் பகுதியில், முள்வேலி அடைக்கப்பட்ட இலங்கை ராணுவத்தினரின் பகுதியில், இவர்களில் பலர், கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தனர்.
 
சரணடைந்தவர்களின் பட்டியலை அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் இராணுவத்தினரிடம் சமர்ப்பித்தார். இவர்கள், பேருந்துகளில் இராணுவத்தினரால் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதை உறவினர்கள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். அவர்களும், அருட்தந்தையும், அதற்குப் பின்னர் காணப்படவில்லை.
 
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போகச் செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் குறித்து நம்பகமான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
 
மேலும், இதற்குப் பொறுப்பானர்களைத் தண்டிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் 110 பேர் தொடர்பான விபரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.