வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 13 ஜனவரி 2015 (19:05 IST)

என் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை - நமல் ராஜபக்க்ஷே

என் மீது கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று ராஜபக்க்ஷேவின் மகன் நமல் ராஜபக்க்ஷே கூறியுள்ளார்.
 
ராஜபக்க்ஷேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
 
இது குறித்து ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்தமத அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே, "ராஜபக்சே மகன்களால் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்துதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
 
ராஜபக்க்ஷேயின் மகன்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து நாங்கள் பல தகவல்களை திரட்டி வரும் அதே நேரத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார்.
 
இதையடுத்து இன்று நமல் ராஜபக்க்ஷே தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார். இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்‌ஷே, “என் மீது கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. என் மீது வழக்கு போடப் போவதாக மந்திரி கூறி இருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன்.
 
அவர் என் மீது வழக்கு போடட்டும் பார்த்துக் கொள்ளலாம். அந்த வழக்கை எதிர் கொள்ள நான் தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.