அடுத்த இலக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்.. ஒருத்தருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த 48 மணி நேர எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் மிக கடுமையான பதில் மிரட்டலை விடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் குடிநீருக்காக மக்கள் பெருமளவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையே நம்பியுள்ளனர். ஈரானின் இந்த எச்சரிக்கை இப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சவுதி அரேபியாவின் ஜுபைல் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டால், ஒரு வாரத்திற்குள் 8.5 மில்லியன் மக்கள் ரியாத் நகரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ஒரு அறிக்கை எச்சரிக்கிறது.
டிரம்பின் மிரட்டலும், ஈரானின் பதிலடியும் உலக எரிசக்தி மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த மோதல் ஒருவேளை போராக மாறினால் வளைகுடா நாடுகளின் அன்றாட வாழ்க்கை முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
Edited by Siva
