செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2015 (17:39 IST)

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால்தான் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் - கருணா

விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதால் தான், இன்று தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கருணா அம்மான் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில், "விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதால் தான், இன்று தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும்.
 
இருப்பினும், அவரை எவ்வாறு உயிருடன் கைது செய்தார்கள் என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், என்னை அழைத்துச் சென்று சடலத்தைக் காண்பித்தார்கள். பல்வேறு சித்திரவதைகளுக்குப் பின்னரே அவர் கொல்லப்பட்டார் என்பதை அவரது சடலத்தைப் பார்த்தவுடனேயே நான் அறிந்துகொண்டேன்.
 
பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், அதன் உண்மை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அப்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால், பிரபாகரனின் சடலத்தைப் பார்த்தபோது, என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு வேதனை ஏற்பட்டது.
 
இருப்பினும், இனி தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்பனை எண்ணி என்னுடைய அந்த வேதனையை தாங்கிக்கொண்டேன். பிரபாகரனின் சடலத்தைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் கடந்த போது, உயிருடன் கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பிரபாகரனை அவர் கடுமையாகத் தாக்கினார் என்றும் அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் நான் ஒருமுறை, மஹிந்தவிடம் விசாரித்தேன். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மாறாக சிறு புன்முறுவலைச் செய்துவிட்டு வேறு ஒரு விடயத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் பின்னர் நான் இது விடயமாக அவரிடம் எதையுமே கேட்கவில்லை.
 
தன்னுடைய மனைவி மற்றும் மகளை இராணுவத்திடம் ஒப்படைத்தது, பிரபாகரன் செய்த மாபெரும் தவறாகும். இறுதி யுத்தத்தின் போது, அவர் தன் மனைவி பிள்ளைகளை தன்னுடனேயே வைத்திருப்பார் என்றே நான் நம்பியிருந்தேன். பின்னரே அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அறிந்துகொண்டேன்.
 
புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும், நாய்க் குட்டிகள் போன்று தங்கள் காலடியில் வந்து விழுந்ததாக இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அப்போது அறிவித்திருந்தார். அதைக் கேட்டபோது எனக்கு, புலிகளின் தலைவர்கள் தொடர்பில் கடுமையான கோபம் ஏற்பட்டது. என்னை துரோகிகள் என்று கூறியவர்கள், இராணுவத்தின் காலடியில் போய் விழுந்ததாக கேள்விபட்டபோது, கடும் கோபம் ஏற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், இந்த தகவலை கருணா அம்மான் மறுத்துள்ளார். தான் எந்தவொரு ஊடகத்துக்கும் இது போன்று நேர்காணல் வழங்கவில்லை என்றும், எனக்கு கழங்கம் விளைவிக்கும் நடவடிக்கையே இது என்றும் கூறியுள்ளார்.