வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (13:44 IST)

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்: ஏராளமான மாணவர்கள் பலி

பாகிஸ்தான் பச்சாகான் பல்கலைக்கழகத்தில் புகுந்து தீவிரவாதிகள் கொடூரத்தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


 
 
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் 20 க்கும் அதிகமான மாணவர்கள் பலியாகியுள்ளனர். தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
 
பாகிஸ்தானின் இந்த பச்சாகான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 3000 பேர் உள்ளனர். இன்று காலை பல்கலைக்கழக சுற்று சுவர் வழியாக உள்ளே குதித்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவரை எல்லாம் சுட ஆரம்பித்தனர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர்.
 
தகவலறிந்து வந்த பாதுகாப்பு படை, தீவிரவாதிகளுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் மாணவர்களையும் மீட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 
தெரிக்-இ-தாலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆண்டும் டிசம்பரில் பெஷாவரில் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.