வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2015 (09:18 IST)

கனடாவில் மோடிக்கு எதிராக மனித உரிமை மீறல் புகார்

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு, கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம், அந்த நாட்டில் வாழும் "நீதிக்கான சீக்கியர்கள்' (எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பு புகார் கொடுத்துள்ளது.
 
பிரதமர் மோடி, அடுத்த வாரம் கனடா செல்லவுள்ள நிலையில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
நரேந்திர மோடி கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை பரவுவதற்கு உதவி புரிந்தார்.
 
எனவே மோடி மீது மனித உரிமை மீறல் குற்ற வழக்கு தொடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கடந்த ஆண்டு மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்த நாட்டு நீதிமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தது.
 
ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் ஒருவர் இருக்கும்போது, அவர் மீது, அமெரிக்கச் சட்டத்தின்படி மனித உரிமை மீறல் வழக்குத் தொடுக்க இயலாது.
 
மேலும், இந்தியப் பிரதமர் மீது மனித உரிமை வழக்கு தொடுக்க இயலாதவாறு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அந்த நாட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியது.
 
அதனையடுத்து, அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
ஆனால், மனித உரிமை மீறல் குற்ற வழக்கில், ஒரு தேசத்தின் தலைவருக்கு அமெரிக்க, இந்திய சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கனடா நாட்டு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்று காரணம் கூறி, மோடி மீது வழக்கு தொடுக்கவேண்டும் என்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்எஃப்ஜே), கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம் புகார் கொடுத்துள்ளது.