இத்தாலி பிரதமர் என்னிடம் கெஞ்சினார்.. டிரம்ப் ஆணவ பேச்சு.. நான் யாரிடமும் இதுவரை கெஞ்சியதில்லை.. மெலோனி பதிலடி...
சமீபத்தில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க "கெஞ்சினார்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, மெலோனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த பேச்சு முற்றிலும் பொய்யானது என்றும், நட்பு நாடுகளை அவர் நடத்தும் விதம் ஏமாற்றம் அளிப்பதாகவும் மெலோனி சாடியுள்ளார்.
பிரபல இத்தாலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், "மெலோனி என்னுடன் புகைப்படம் எடுக்க மிகவும் ஆசைப்பட்டார், கெஞ்சினார். எனக்கு விருப்பமில்லை என்றாலும், அவர் மீது பரிதாபப்பட்டு புகைப்படம் எடுத்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த மெலோனி, "டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்று முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தனது நட்பு நாடுகளிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை. மேற்குலகின் எதிரிகளிடம் காட்டும் மென்மையான போக்கை அவர் நட்பு நாடுகளிடம் காட்டுவதில்லை. எனினும், நானும் சரி, இத்தாலியும் சரி, யாரிடமும் எப்போதும் கெஞ்சுவதில்லை" என்று மிக காரசாரமாக பதிலளித்துள்ளார்.
இந்த மோதலின் எதிரொலியாக, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தாஜானி தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த கருத்து இத்தாலிய பிரதமருக்கும், ஒட்டுமொத்த இத்தாலிய நாட்டிற்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வலதுசாரி தலைவர்களான இருவருக்கும் இடையே, ஈரான் போர் விவகாரத்தில் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், தற்போதைய இந்த மோதல் இரு நாட்டு உறவை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
Edited by Siva
