வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 28 டிசம்பர் 2014 (18:10 IST)

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் நடு வானில் மாயம்

இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து இன்று காலை சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானம் நடு வானில் மாயமாகியுள்ளது.



 
இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நகருக்கு இன்று காலை 155 பயணிகள் மற்றும் 6 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவுடன் ஏர் ஏசியா விமானம் (எண் QZ8501) புறப்பட்டது.
 
இந்த விமானம் புறப்பட்டு 42 நிமிடங்களில் கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
 
காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர் ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. தகவல் பறிமாற்றம் துண்டிக்கப்பட்டதாவும், விமானம் வழக்கமான ஒடு பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமா ஈடுபட்டு வருகின்றனர்.
 
இது குறித்து சுரபயா விமான நிலைய மேலாளர் திரிகோரா ரஹார்ஜியோ கூறுகையில், "இந்தோனேசிய அதிகாரிகள் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும் விமானப் படை அதிகாரிகளும் சி-130 ரக போர் விமானங்கள் மூலம் மாயமான விமானத்தை தேடி வருகின்றனர்.
 
இதுவரை விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. தேடும் பணிக்கு ஏர் ஏசியா அதிகாரிகளும் ஒத்துழைத்து வருகின்றனர்.
 
தகவல்கள் கிடைக்கும் நிலையில், அதனை நாங்கள் உடனுக்குடன் ஊடகங்கள் வழியாகவும், பயணிகளின் குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
 
சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் ஜாவா கடற்பகுதிக்கு மேல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது என்று இந்தோனேஷியா போக்குவரத்து துறை அதிகாரி ஹாதி முஸ்தபா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.