வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய திடீர் ராணுவ தாக்குதல்.. இந்தியா கவலை..!
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய திடீர் ராணுவ தாக்குதல் மற்றும் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து நியூயார்க்கிற்கு அழைத்து சென்றுள்ளன.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் நிலவும் சமீபத்திய சூழல் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்றும், அப்பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
வெனிசுலாவில் வசிக்கும் இந்தியர்களின் நலன் குறித்து இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத்தயாராக இருப்பதாகவும், அவசரத் தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran