இந்து இளைஞர் உயிருடன் தீ வைத்து கொலையா? தேர்தலுக்கு முன் மதக்கலவரம் ஏற்படுத்த சதியா?
வங்கதேசத்தின் நரசிங்கடியில் உள்ள ஒரு மோட்டார் கேரேஜில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்மத் தீவிபத்தில், 25 வயதான சஞ்சல் பௌமிக் என்ற இந்து இளைஞர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சஞ்சல் கடையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அடையாளம் காண முடியாத அளவிற்கு அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது மின்சாரக் கசிவு என தோன்றினாலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. தீப்பிடிப்பதற்கு சற்று முன்பு ஒரு மர்ம நபர் அந்தப் பகுதியில் நடமாடியது கேமராவில் பதிவாகியுள்ளது. "சம்பவ இடத்தில் ஒரு நபரின் நடமாட்டம் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது, இது திட்டமிட்ட சதி செயலாக இருக்கலாம்" என்று நரசிங்கடி எஸ்பி அப்துல்லா அல் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தேர்தலுக்கு முன்னதாக மத ரீதியான பதற்றத்தை உருவாக்கவே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Edited by Siva