வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2015 (15:42 IST)

கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
 
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி வகித்தவர் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் காலே துறைமுகத்தில் 12 கன்டெய்னர்களில் ஆயுதக் குவியல் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
 
அதை, சோமாலியா நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களிடமிருந்து இலங்கைக் கப்பல்களைக் காப்பதற்காக தனியார் நிறுவனம் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படைக்கு இழப்பு ஏற்படும் வகையில் தனியார் நிறுவனம் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆயுதக் குவியல் தொடர்பான வழக்கு விசாரணை, தெற்கு இலங்கையில் உள்ள துறைமுக நகரமான காலேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு முடியும் வரை கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.