1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2015 (17:14 IST)

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் மின்னணு கழிவுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா

உலகளவில் மின்னணு கழிவுப் பொருட்கள் குறித்து ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 5 வது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.


 


 
மின்னணு கழிவுப் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த கழிவுகள் மறு சுழற்சிசெய்யப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது. இதனால் பல்வேறுஎதிர்விளைவுகள் ஏற்படுகின்றன.
 
பேட்டரி செல்கள், செல் போன் பாகங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்கள் குப்பைகளில் கழிவுகளாக வீசப்படுகின்றன. இந்த மின்னணு கழிவு பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரும் தீங்கை விளைவித்து வருகின்றன. இது குறித்த ஓர் ஆய்வு ஐ.நா. சபை சார்பில் 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.
 
ஐ. வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த 2014 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 4 கோடியே 18 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் 65 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. அதிக அளவில் மின்னணு பொருட்கள் கழிவுகள் சேகரமாகும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 71 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
 
இதற்கு அடுத்த இடத்தில் சீனா (60 லட்சம் டன்) உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி நான்காவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் 17 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.