இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் முழுவதும் உள்ள மக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில் பயணங்களை தவிர்க்குமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய நேரப்படி இன்று இரவு 9:00 மணி வரை அதாவது இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு மக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் பாரசீக மொழியில் பதிவிட்டுள்ளது.
"உங்கள் பாதுகாப்பிற்காக இந்த வேண்டுகோளை விடுக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என மறைமுகமாக எச்சரித்துள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் முற்றி வரும் சூழலில், ஈரானின் உள்கட்டமைப்புகள் அல்லது போக்குவரத்து வழித்தடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva