வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 4 பிப்ரவரி 2015 (17:01 IST)

பிடல் காஸ்ட்ரோ புகைப்படம் வெளியிடப்பட்டது: உடல்நலம் குறித்த வதந்திகள் ஓய்ந்தது

கியூபாவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் (88) உடல்நலம் தொடர்பான பல்வேறு வதந்திகளைத் தொடர்ந்து, அவரது புகைப்படத்தை கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
பிடஸ் காஸ்ட்ரோவை அவரது வீட்டில் கியூபா பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ராண்டி பெர்டோமா சந்தித்து பேசுவது போலவும், காட்ஸ்ட்ரோவின் மனைவி டேலியா அருகில் நின்று கவனிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தப் புகைப்படங்கள் கியூபா அரசுக்கு சொந்தமான `கிராண்மா’ நாளேட்டில் நேற்று முன்தினம் வெளியாகின.
 
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் இரு நாடுகள் இடையிலான உறவை புதுப்பிக்கப் போவதாக டிசம்பர் மாதம் அறிவித்தனர்.
 
இதன் பிறகு பிடல் காஸ்ட்ரோ மவுனம் காத்து வந்ததால், அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், ஒருவேளை அவர் இறந்திருக்கலாம் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி எடுக்கப்பட்டதாகவும் பிடல் காஸ்ட்ரோ மிகவும் ஆரோக்கியமுடன் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோ தனது வீட்டுக்கு அருகில் கலைக்கூடம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு பொது நிகழ்ச்சி எதிலும் அவர் பங்கேற்கவில்லை.
 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது புகைப்படம் ஒன்று வெளியானது. அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.