நேற்று இந்தியா, இன்று ஆப்கானிஸ்தான்.. இஸ்லாபாத் குண்டுவெடிப்புக்கு பழிபோடும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தானில் நேற்று நடந்த பயங்கரமான தற்கொலை படை தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயரமான சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என்று முதலில் பழிசுமத்திய பாகிஸ்தான், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் காவாஜா ஆசிப் இன்று புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த புகாருக்கு ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தனது உள்நாட்டு பாதுகாப்பை சரிசெய்ய தவறிய பாகிஸ்தான், தேவையில்லாமல் அண்டை நாடுகள் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் காட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் வாதத்தை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விடுத்து மற்றவர்களைக் கைகாட்டுவது தீர்வாகாது என சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Edited by Siva