வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (17:10 IST)

வடகொரியாவில் 9 மணி நேரம் இணையதள தொடர்புகள் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

வட கொரியாவில் இணையதள தொடர்புகள் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளானார்கள்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
 
ஏனெனில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’தி இண்டர்வியூ’ என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்தது. இந்நிலையில்தான் சோனி  நிறுவனத்தின் கணினிகள் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
 
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இந்த செயலில் வடகொரியா ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கு பதிலடிக்கு விதத்தில், வடகொரியா தேசிய பாதுகாப்பு கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும்’ என்றும் எச்சரித்துள்ளது.
 
மேலும், த இன்டர்வியு திரைப்படத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இதனால், ’தி இன்டர்வியூ’ படத்தை வெளியிடுவதை ரத்து செய்தது சோனி.
 
இந்நிலையில் அதிரடியாக வட கொரியா முழுவதும் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மணிக்கணக்கில் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் வட கொரியாவில் எந்த இணையதளத்தையும் காண முடியவில்லை.
 
கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேலாக இணையதளங்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடித்தது. இந்த திடீர் இருட்டடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று இணையதள கட்டமைப்புகளை கண்காணித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டின் (Dyn) நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்த திடீர் துண்டிப்புக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், இந்த இணையதள முடக்கத்திற்கு அமெரிக்கா கூட காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.