1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (20:12 IST)

புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புதிய மருந்து

மனிதர்களை அச்சுறுத்தும் புற்றுநோய் கிருமிகளை, எதிர்த்து அழிக்கும் நுண்துகள்களை அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறு கட்டியாக உருவாகும் புற்றுக்கட்டி என்ற நிலையிலிருந்து புற்றுநோயாக மாறும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது. ரத்தத்தில் புற்றுநோய் கிருமிகள் கலந்து உடல் முழுவதும் பரவும்.
 
பெரும்பாலான மரணங்கள் புற்றுக்கட்டியாக இருந்து புற்றுநோயாக மாறும்போதுதான் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட அபாயகரமான கட்டத்தில் புற்றுநோய்க் கிருமிகள் ரத்தத்தில் பரவுவதை எதிர்த்து சமாளிக்க புதிய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
ரத்த ஓட்டத்தில் தங்கி ரத்தத்தில் பரவும் புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் நுண்துகள்களை அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஒட்டும் சிறு பந்துகள் என்று இவற்றை அழைக்கிறார்கள்.
 
இந்தத்துகள்கள் ரத்தத்தில் செலுத்தப்படும்போது, அவை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களோடு ஒட்டிக் கொள்கின்றன. இவை புற்றுக்கட்டியிலிருந்து பிரிந்து பரவும் புற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்து அழிக்கின்றன. இவை புற்றுநோய் கிருமிகளோடு இணைந்து அவற்றை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதுவரை சோதனைகள் மனிதர்கள் மற்றும் எலிகளிடம் நடத்தப்பட்டுள்ளன. இவை அதிசயிக்கத்தக்க வெற்றி பெற்றுள்ளது. இரண்டு மணிநேரத்தில் கிருமிகள் சிதைத்து அழிக்கப்பட்டன. ஆனால், இதுதொடர்பாக மேலும் பல கட்ட ஆராய்ச்சிகள் தேவை என்று பேராசிரியர் கிங் தெரிவித்துள்ளார்.
 
இந்த நுண்துகள்கள் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாகவோ, ரேடியோதெரபி சிகிச்சைக்கு முன்னரோ, பயன்படுத்தப்படலாம். மேலும் நோய் தீவிரமடைந்த நோயாளிகளுக்கும் இது பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
இதுவரையிலான சோதனையில் இந்நுண்துகள்கள் ரத்தத்தில் உள்ள நோய்எதிர்ப்பு சக்திக்கோ, ரத்த அணுக்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.