விஜயகாந்த் அணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு : தமாகாவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகல்
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததற்கு, அந்த கட்சியில் சில முக்கிய தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், தமாகாவில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆரம்பித்தார். பீட்டர் அல்போன்ஸ் உட்பட சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக அந்த கட்சியில் இணைந்தனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமாகா, அதிமுக அணியுடன் கூட்டணி வைக்க முயன்றது. ஆனால் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், இரட்டை இலை சின்னத்திலியே போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் விதிக்கப்பட்டதால், அதிமுக கூட்டணியிலிருந்து ஜி.கே. வாசன் விலகி, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தார்.
அந்த கூட்டணியில், தமாகா-விற்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி- தமாகா என்ற புதிய கூட்டணி தற்போது உருவாகியுள்ளது. ஆனால், இந்த கூட்டணிக்கு தமாகா துணைத் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், தமாகா துணைத்தலைவர் ராணி உட்பட சில முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதையே தாங்கள் விரும்பியதாகவும், ஜி.கே. வாசனின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜி.கே. வாசன் தனது முடிவை மறு பரீசிலனை செய்து, அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பீட்டர் அல்போன்ஸ் தமாகாவில் இருந்து விலகிவிட்டதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், தமாகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுத்ததாகவும், அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.