1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (08:31 IST)

தேமுதிக - மக்கள் நல கூட்டணிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு அலை: வைகோ

தேமுதிக - மக்கள் நல கூட்டணிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு அலை அடிக்கிறது. பேரலையாக அடிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.


 


காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்துள்ள மாமண்டூர் ஸ்ரீஆண்டாள் அழகர் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் இம்மாதம் 10  தேதி தேமுதிக - மக்கள் நல கூட்டணி சார்பில் மாற்று அரசியல் தேர்தல் மாநாடு நடைபெறவுள்ளது.
 
இந்த மாநாட்டு திடலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், தேமுதிக இளைஞர் அணி தலைவர் சுதீஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
 
10 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேசுகிறார்கள். மாநாட்டுக்கு நான் தலைமை தாங்குகிறேன்.
 
மாநாட்டில் 5 கட்சிகளின் தொண்டர் படையினர் மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தி பணியாற்றுவார்கள். இந்த மாநாடு, அமையப்போகிற தேமுதிக - மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு நுழைவு வாயிலாகத் திகழும்.
 
தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒரு கூட்டணி ஆட்சி அமையப்போகிறது முதலமைச்சராக விஜயகாந்தை தமிழக வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கையோடு இருக்கிறோம்.
 
தேமுதிக - மக்கள் நல கூட்டணிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு அலை அடிக்கிறது. பேரலையாக அடிக்கிறது.
 
ஊழல் இல்லாத அரசு, மது இல்லாத தமிழகம், வேலை வாய்ப்பு இல்லாத வாலிபர்கள், பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் வெளிப்படையான அரசு அமையும். இவ்வாறு வைகோ கூறினார்.