வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சுற்றுலா
  4. »
  5. தமிழ் நாடு
Written By Webdunia

ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு போகலாம்

காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய வரலாற்று சிறப்பு மிக்க நகரம் தான் ஸ்ரீரங்கப்பட்டினம்.

ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டினத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு வரலாற்று கதை இருக்கும்.

ஒரு காலத்தில் மைசூரை ஆண்டு வந்த திப்பு சுல்தானின் தலைநகரமாக இந்த ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் விளங்கியது. அந்த காலத்தில் திப்பு சுல்தானின் மாளிகையாக விளங்கிய பரந்து விரிந்த கோட்டை இன்றளவும் கம்பீரமாக நின்று கொண்டு நம்மை வரவேற்று அதிசயிக்க வைக்கிறது.

webdunia photoWD
இந்த கோட்டைக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்க சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர்.

திப்பு சுல்தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்ட களமும் நமது வரலாற்றுப் பெருமைகளை தாங்கி நிற்கிறது.

திப்பு மற்றும் ஹைதர் அலியின் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்ல, ஸ்ரீரங்கப் பட்டினத்தில் அ‌திக அள‌விலான தூ‌ண்களை‌க் கொ‌ண்ட ரங்கநாதர் ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

வார விடுமுறையைக் கழிக்கும் விதத்தில் செல்லும் ஒரு சுற்றுலாவிற்கு ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் ஏற்ற இடமாகும்.

காலையில் கிளம்பினால் ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் கோட்டையைச் சுற்றிப்பார்த்து முடிக்க அரை நாட்கள் ஓடி விடும். அங்கிருந்து திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

அங்கிருந்து திப்பு சுல்தானின் கோடைக்கால மாளிகையைக் காண செல்லுங்கள். தரியா தெளலத் பாக் என்ற அந்த மாளிகை முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருக்கும்.


கோடை கால‌த்‌தி‌ல் ‌நி‌ம்ம‌தியாக‌‌த் த‌ங்‌கி வர அ‌ந்த மா‌ளி‌கை க‌ட்ட‌ப்ப‌ட்டதா‌ம். அது தற்போது அருங்காட்சியகமாக மாற்றி வைக்கப்பட்டிருக்‌கிறது. அந்த மாளிகையில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி பற்றிய அழகிய கைவண்ணங்களும், அழகிய ஓவியங்களும் நிறைந்திருக்கும்.

இ‌ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை எல்லாம் பார்க்க ஒரு நாளை ஒதுக்கிவிடுங்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினால் பின்னர் மறுநாள் காலையில் கோயில்களைக் காணத் தயாராகலாம்.

ஸ்ரீரங்கநாதர் ஆலயம், ஸ்ரீ ராதா மாதவா கோயில், 450 படிகட்டுகளைக் கொண்ட வெங்கடரமணா கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மேலும், ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த்தில் சுடச்சுட போடப்படும் ஜாங்கிரி எனப்படும் ஒரு இனிப்புப் பண்டத்தை சுவைத்தபடி காவிரி நதியின் சலசல ஓசையில் லயிக்கலாம்.

எங்கு தங்கலாம்?

ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் அங்கு அதிக அளவிலான தங்கும் விடுதிகள் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் நதியோரத்தில் அமைந்திருக்கும் விடுதி, கோட்டையின் பின்னணியில் அமைந்திருக்கும் விடுதி என தேர்ந்தெடுத்து தங்குவது சிறப்பாக அமையும்.

எப்படிச் செல்வது?

விமான மார்கம் : உள்ளூர் விமானம் மூலமாக பெ‌ங்களூ‌ர் விமான நிலையத்தைச் சென்றடையலாம். அங்கிருந்து சாலை மார்கமாக செல்லலாம்.

ரயில் மார்கம் : பெ‌ங்களூ‌ர் ரயில் நிலையம் மிகவும் முக்கியமான சந்திப்பு நிலையமாகும். அ‌ங்‌கிரு‌ந்து மைசூ‌ர் ‌விரைவு ர‌யி‌ல் மூலமாக ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌ம் போகலா‌ம்.

சாலை மார்கம் : தே‌சிய நெடு‌ஞ்சாலை 17‌ல் ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த்தை நோ‌க்‌கி பய‌ணி‌க்கலா‌ம். மாது‌ர், ம‌ண்டியா வ‌ழியாக‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.