வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2014 (11:14 IST)

ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை

ஐந்து படங்கள் நடித்த சிவ கார்த்திகேயன் ப்ரியா ஆனந்த், ஹன்சிகா என்று அடுத்தடுத்து முன்னணி நடிகைகளுக்கு தாவும் போது தொடர் வெற்றியை தந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி காயத்ரி, ஐஸ்வர்யா என்று கடைகோடியில்தான் கடைவிரிக்கிறார். ஐஸ்வர்யாவுடன் இரண்டு படங்கள் தொடர்ந்து நடிக்க, விஜய் சேதுபதி ஐஸ்வர்யாவுக்காக சிபாரிசு செய்கிறார் என பேச்சு. இந்த பொறி பெரிய நெருப்பாகி, விஜய் சேதுபதியுடன் இனி நடிப்பதில்லை என ஐஸ்வர்யா கடுமையான முடிவு எடுக்கும்வரை சென்றது. 
இப்போது காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி படங்களைத் தொடர்ந்து மீண்டும் காயத்ரியுடன் மெல்லிசை படத்தில் விஜய் சேதுபதி. ஹீரோயினை நீங்கள் சிபாரிசு செய்கிறீர்களா என்று கேள்வி எழாமல் இருக்குமா?
 
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நான் படத்தில் ஆக்ஷன் இருக்கிறதா, டூயட் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வித்தியாசமான கதையா என்று மட்டும்தான் பார்ப்பேன். ஹீரோயினாக யாரை போட வேண்டும் என்று நான் சொல்வது கிடையாது என்றார்.
 
விஜய் சேதுபதியை தேடி வரும் பல படவாய்ப்புகளை கால்ஷீட் இல்லாமல் வேறு நடிகர்களுக்கு திருப்பிவிட்டுள்ளார். ஆனால் ஜோடியாக இவரைத்தான் போட வேண்டும் என இதுவரை கேட்டதில்லையாம். காயத்ரியுடன் ஏற்கனவே நடித்த படங்கள் நன்றாகப் போனதால் மீண்டும் மெல்லிசையில் அவரை இயக்குனர் ஹீரோயினாக்கியிருக்கலாம். இதில் எனது தலையீடு எதுவும் கிடையாது என்றார்.
 
மெல்லிசை தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி படத்தை இயக்கி வருகிறார்.