1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (15:38 IST)

சித்தார்த்தின் பொறுப்பற்றதனம் - தயாரிப்பாளர்கள் கண்டிப்பு

ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதியை பட யூனிட்டுக்கோ, படத்தை இயக்கியவருக்கோ, நடித்த சித்தார்த்துக்கோ தெரியப்படுத்தாமல் ஜூலை 25 -லிருந்து ஆகஸ்ட் 1-க்கு மாற்றினார் படத்தின் தயாரிப்பாளரான கதிரேசன். இதனை தனது ட்விட்டரில் கடுமையாக கண்டித்திருந்தார் நடிகர் சித்தார்த்.
 
சித்தார்த்தின் இந்த கடும் கண்டனத்துக்கு கதிரேசன் விளக்கக் கடிதம் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
 
நான் என்னுடைய குரூப் கம்பெனி சார்பாக தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி படங்களை தயாரித்திருக்கிறேன். சுமார் 50 படங்களை விநியோகித்தும், 200 படங்களின் ஆடியோ சிடிக்களை வெளியிட்டுமிருக்கிறேன். அத்துடன் ஏறக்குறைய 100 படங்களின் வெளிநாட்டு உரிமைகளின் பொறுப்பையும் ஏற்றிருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் நேர்மையான முறையில் படங்களை விநியோகித்து என்னுடைய கம்பெனிக்கு இன்டஸ்ட்ரியில் நல்ல பெயரை வாங்கியுள்ளேன்.
 
நான் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளேன். ஒவ்வொருமுறை படத்தை வெளியிட முயலும் போதும் விஜய், அஜீத் படமோ இல்லை கோச்சடையானோ வந்துவிடுவதால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எந்த தயாரிப்பாளரும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க தன்னுடைய படத்தை எவ்வளவு விரைவில் வெளியிட முடியும் என்றுதான் விரும்புவார்கள். தேவையில்லாமல் யாரும் தங்களின் படத்தை தள்ளி வைப்பதில்லை.
 
தனுஷின் விஐபி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து என்னவென்றால் ஒருவாரம் கழித்து ஜிகர்தண்டா வெளியானால் நிறைய திரையரங்குகள் கிடைக்கும், கலெக்சனும் அதிகமாக இருக்கும். ஜிகர்தண்டா என்னுடைய குழந்தை. யார் தன்னுடைய சொந்த குழந்தையையே கொல்ல‌த் துணிவார்கள்? ஏன் சித்தார்த் இதனை புரிந்து கொள்ளவில்லை?
 
- என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து தாணு, சத்யஜோ‌தி தியாகராஜன், டி.சிவா, கதிரேசன், சித்ரா லக்ஷ்மணன், ஹெச்.முரளி உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கூட்டாக சித்தார்த்தின் பொறுப்பற்றதன்மையை கண்டித்துள்ளனர்.
 
ஆனால் உண்மையில் யார் பொறுப்பற்றவர்? கதிரேசன் ஜிகர்தண்டாவை தன்னுடைய குழந்தை என்கிறார். பணம் போட்டவருக்கு படம் குழந்தை என்றால் அதனை உருவாக்கிய கார்த்திக் சுப்பாராஜுக்கு அது குழந்தையில்லையா? அவரிடமும், படத்தில் நடித்த சித்தார்த்திடமும் மற்றும் படத்தில் பணியாற்றிய யாரிடமும் தகவல் அறிவிக்காமல் தன்னிஷ்டமாக படத்தின் வெளியீட்டு தேதியை கதிரேசன் மாற்றியதற்கு என்ன பெயர்? பணம் போட்ட எனக்குதான் - எனக்கு மட்டும்தான் படம் சொந்தம் என்ற ஆணவத்தின் வெளிப்பாடுதானே இந்த செயல்? 
 
கதிரேசனின் இந்த பொறுப்பற்றத்தன்மையை கண்டிக்க திராணியில்லாதவர்கள் ஒன்றுகூடி சித்தார்த்தை கண்டித்திருக்கிறார்கள். உண்மையில் இவர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.