கிளாமர் - அப்செட்டான அப்சரஸ்
மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் மூன்று வருடங்களுக்கு முன் மகரமஞ்சு என்ற பெயரில் ஒரு படம் இயக்கினார். கேரளாவின் தலைசிறந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவுக்கும், அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான உடல்ரீதியான நெருக்கம்தான் மகரமஞ்சுவின் கதை.
இந்தப் படத்தில் ராஜா ரவிவர்மாவாக கேமராமேன் சந்தோஷ் சிவன் நடித்தார். அவரின் காதலி ஊர்வசியாக ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர். ஏறக்குறைய கார்த்திகாவின் அப்பா வயது சந்தோஷ் சிவனுக்கு. இவர்களின் இருவரின் ரொமான்டிக் காட்சிகள் அன்று கேரளா தாண்டி தமிழகத்திலும் சலசலப்பை உண்டாக்கியது. அதேநேரம் கார்த்திகாவின் கரியரில் இம்மியளவு அசைவையும் அப்படம் ஏற்படுத்தவில்லை.
மகரமஞ்சுவை அதன் கிளாமர் காரணமாக தமிழில் அப்சரஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து இந்த மாதம் வெளியிடுகின்றனர். கோ படத்துக்குப் பிறகு காணாமல் போன கார்த்திகாவுக்கு டீல் என்ற ஒரேயொரு படம்தான் கிடைத்தது. பல வருடங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் அப்படம் இப்போதுதான் வா என்று பெயர் மாறி தியேட்டருக்கு வரும் நிலையில் உள்ளது.
அதேபோல் ஜனநாதனின் புறம்போக்கு படத்திலும் கார்த்திகாவுக்கு முக்கிய வேடம் கிடைத்துள்ளது.
சினிமா கரியர் துளிர்விடும் நேரம் பார்த்து மகரமஞ்சு என்ற சுடுநீரை தமிழ்ப்படுத்தி தலைமீது ஊற்றுகிறார்களே என்று அப்சரஸுக்கு - அதாவது கார்த்திகாவுக்கு வருத்தம்.
என்ன செய்வது... முற்பகல் செய்வதுதானே பிற்பகலில் விளையும்.