ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது ‘ஜனநாயகன்.. எப்போது ரிலீஸ்?
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜன நாயகன்" சென்சார் போர்டின் மறுசீரப்பு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தணிக்கை வாரியத்தின் முடிவுக்குக் காத்திருக்கிறது.
முன்னதாக, தணிக்கைத்துறை இப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் ஒரு உறுப்பினரின் புகாரால் சான்றிதழ் தாமதப்படுத்தப்பட்டதாகவும் தயாரிப்புத் தரப்பு வாதிட்டது.
குறிப்பிட்ட சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், ராணுவத்தை தவறாகச் சித்தரிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி இப்படம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஏற்கனவே செய்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், தேர்தல் நெருங்கும் சூழலில் படத்தின் அரசியல் உள்ளடக்கம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
சான்றிதழ் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் உள்ள மனுவை திரும்பப் பெற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva