1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vairamuthu says about rajinikanth and politics

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

ரஜினிகாந்த்
தமிழக அரசியலில் மட்டுமல்லாது வடநாட்டு அரசியலிலும் ஒரு பெரும் திருப்பம் ஏற்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆன்மீக அறிவும் தீர்க்கதரிசனமும் கொண்ட ரஜினியின் இந்த அரசியல் கணிப்பு தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: 
 
சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
 
‘பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
 
வியப்புக்குரிய மனிதர்தான்
 
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது
 
உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது
 
எங்கள் நூறு நிமிட
உரையாடலை
‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை
 
தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்
 
ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின
 
வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு 
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்
 
அடுத்த 
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்
 
2027 ரஜினி ரசிகர்களுக்குக் 
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்
 
அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை
 
‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’
 
என் தமிழ்
பொய்யாகவில்லை
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..