நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!
யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் டாக்ஸிக். இப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்படுவதாக யஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. இருப்பினும், உலகளாவிய விநியோகம் மற்றும் புதிய விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களுக்கு ஒரு தரமான அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், ரிலீஸ் தேதியை மறுபரிசீலனை செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஷ் இயக்கியுள்ள இந்தப் படம், கோவாவில் நடக்கும் போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையாகும். வெறும் ஆக்ஷன் மட்டுமின்றி, இதில் சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களும் நிறைந்துள்ளன. பான்-இந்தியா படமாக உருவாகும் இதில் தாரா சுதரியா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி மற்றும் டோவினோ தாமஸ் என இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
ஹாலிவுட் ஆக்ஷன் நிபுணர்களின் பங்களிப்புடன், பன்னாட்டுத் தரத்தில் சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்திலேயே பல கோடி பார்வைகளைப் பெற்று சாதனையைப் படைத்தது. குறிப்பாக, டீசரில் இடம்பெற்ற "Female Gaze" தொடர்பான விவாதங்களுக்கு யஷ் ஆதரவு தெரிவித்தது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.
கேவிஎன் தயாரிப்பு மற்றும் மான்ஸ்டர் மைண்ட் க்ரியெஷன் இணைந்து தயாரித்துள்ள 'டாக்ஸிக்', இந்திய சினிமாவின் அடுத்த மைல்கல்லாக அமையும் எனத் தெரிகிறது.
