திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2025 (08:16 IST)

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. 26 வருடங்கள் கழித்து, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு காண உள்ளது. 
 
இந்த சூழலில், 'படையப்பா' படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்கள் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோவில், அவர் படத்தில் இடம்பெற்ற ஊஞ்சல் காட்சி எப்படிப் படமாக்கப்பட்டது, நீலாம்பரி கதாபாத்திரம் எப்படி தோன்றியது உள்ளிட்ட பல விஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், ரஜினிகாந்த் 'படையப்பா' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்குத் தோன்றியதாக தெரிவித்தார். குறிப்பாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தின் பிரபலமான வசனமான, "அடுத்த ஜென்மத்திலாவது வந்து உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன்" என்பதை மையக்கருவாக கொண்டு இரண்டாம் பாகம் உருவாக்கப்படலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். இந்த கதை கருத்தின் காரணமாக, இந்த படத்திற்கு 'நீலாம்பரி படையப்பா 2' என்ற டைட்டில் வரலாம் என்றும் அவர் குறிப்பால் உணர்த்தினார்.
 
தற்போது இந்த இரண்டாம் பாகத்திற்கான கதை விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தினார். கதை நன்றாக அமைந்து, திட்டம் நிறைவேறினால், 'படையப்பா 2' திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
 
Edited by Siva