ஜன நாயகன் லீக் விவகாரம் - பிரதீப் ரங்கநாதன் சொன்ன கருத்து
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் எல்ஐகே. 2040-ம் ஆண்டு பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், தற்போது திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக மதுரை வந்த பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், நான் மதுரைக்கு சிக்கன் குழம்பு சாப்பிடத்தான் வந்திருக்கிறேன். எனக்கு மதுரையின் அனைத்து விதமான உணவுகளும் மிகவும் பிடிக்கும். இங்குள்ள சாப்பாட்டுக்கு நான் ஒரு மிகப்பெரிய ரசிகன் என்று கலகலப்பாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் படம் நாங்கள் நினைத்ததை விட மிகவும் நன்றாக வந்துள்ளது. இன்று மதுரையில் படம் ரிலீஸான திரையரங்குகளுக்கு செல்ல இருக்கிறேன். அண்ணன் சீமான் வரும் காட்சிகள் தியேட்டரில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் ஜன நாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது மிகவும் தவறான விஷயம். ஒரு படத்தின் பின்னணியில் உள்ள உழைப்பை வீணாக்கும் இந்தச் செயல் எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் அனைவரும் தயவுசெய்து இணையத்தில் லீக் ஆன பிரதிகளைப் பார்க்காமல், திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள் எனப் பிரதீப் ரங்கநாதன் கூறினார்