1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2015 (14:59 IST)

மெல்லிசை மன்னர் மறைவு - பிரதமர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
 

 
முதல்வர் ஜெயலலிதா
 
மெல்லிசை மன்னர் என்றும் எம்.எஸ்.வி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக திகழும் பழம்பெரும் இசையமைப்பாளர், திரையுலக இசை மேதை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இன்று (14.7.2015) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.
 
அன்பும், அடக்கமும், எளிமையும், இறைப் பற்றும் மிகுந்த எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் பயணம் அவரது 13-வது வயதிலேயே ஆரம்பித்து விட்டது.
 
இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் பணி புரிந்த எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தியுடன் இணைந்து, சுப்பராமன் மறைவால் முழுமைப் பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார்.
 
எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ்.விஸ்வநாதன், பணம் திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை ராமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனியாக இசை அமைத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள், ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் மிகப் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்.
 
எம்.எஸ்.விஸ்வநாதன், தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல், வேறு இசைமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் கூட பாடல் பாடியவர் ஆவார்.
 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான, நீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
அவரது இசையில், நான், சூரியகாந்தி என்ற திரைப்படத்தில், ஓ மேரி தில்ரூப், அன்பைத்தேடி என்ற திரைப்படத்தில், சித்திர மண்டபத்தில், திருமாங்கல்யம் என்ற படத்தில், உலகம் ஒரு நாள் போன்ற மனதைக் கவரும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளேன்.
 
1965-ம் ஆண்டு நான் நடித்து வெளி வந்த வெண்ணிற ஆடை திரைப்படத்தில் உள்ள கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல என்ற பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் பிரபலமடைந்தது.
 
அதே ஆண்டில் வெளிவந்த, நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படமான, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் காலத்தால் அழியாத புகழ் பெற்ற, நாணமோ, அதோ அந்த பறவை போல பல பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக அமைந்திருந்தன.
 
இவர் இசையமைத்த பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.
 
பெரும் புகழுக்கும் பெருமைக்கும் உரிய எம்.எஸ் விஸ்வநாதன் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது எனக்கு என்றும் மனவருத்தத்தை அளித்து வந்தது.
 
நான் 1991-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றது முதல் விஸ்வநாதன் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்து வருகிறேன். ஆயினும் மாநில அரசுக்கு சாதகமாக எதையும் செய்யாத மத்திய அரசுகள் இதற்கும் செவிசாய்க்கவில்லை.
 
கலைமாமணி விருது பெற்ற எம்.எஸ். விஸ்வநாதன் எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரர்.
 
தமிழ் இசை சங்கம் 2003-ம் ஆண்டு இவருக்கு, இசை பேரறிஞர் பட்டம் வழங்கி பெருமை சேர்த்தது. தென்னிந்திய பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது என பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
 
எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு 2012-ஆம் ஆண்டு, திரை இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நான் வழங்கி அவரை கௌரவித்தேன். அன்றைய விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து இசையமைத்து பாடியது இன்றும் என் மனக் கண் முன் உள்ளது.
 
தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும்இ குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
 
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விஜயகாந்த்
 
தமிழ்த் திரையுலகில் வரலாறு படைத்து, மேற்கத்திய இசையை தமிழ் இசையுடன் கலந்து, திரைப்படங்களின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர், பல்வேறு மொழிப்படங்களுக்கும் இசையமைத்தவர்.
 
பாமரர்களும் இசையை விரும்பிக் கேட்கவைத்த இசையுலகின் மாமேதை, சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம்செய்து 1200 படங்களுக்குமேல் இசையமைத்து, கலைமாமணி, இசைப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல விருதுகளைப்பெற்றவர்.
 
இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்த பெருமையும் இவரையேச் சாரும்.
 
இவ்வளவு பெருமைகளை பெற்றவர் உடல்நலக்குறைவால் இன்று (14.07.2015) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
 
அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழ்த்திரையுலகம் உள்ளவரை அவரது நினைவும், புகழும், பெருமையும் என்றென்றும் நிலைத்துநிற்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
 
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்இ நண்பர்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
டாக்டர் ராமதாஸ்
 
தமிழ் திரையுலகின் தனிப்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தீராத் துயரமும் அடைந்தேன்.
 
திரைப்பட இசையமைப்பாளராக 62 ஆண்டுகளுக்கு அறிமுகமான விஸ்வநாதன் திரை இசையில் எண்ணற்ற புதுமைகளை படைத்தவர். தனது இசையால் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.
 
வீரமூட்டும் பாடல்களாக இருந்தாலும், காதல் பாடல்களாக இருந்தாலும், சோகப்பாடல்களாக இருந்தாலும் அதற்கேற்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்துவது தான் இவரது இசையின் மகத்துவம். இவரது இசையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது, இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
 
தனிப்பட்ட வாழ்க்கையிலும் குழந்தையைப் போல பழகக்கூடியவர். விருந்தோம்பலில் சிறந்தவர். இசையில் சிறந்தவன் என்ற கர்வம் இல்லாதவர். அதனால் தான் இப்போது அறிமுகமான இசையமைப்பாளர்களுடன் கூட இணைந்து பணியாற்றுவது அவருக்கு சாத்தியமானது. ஆனால், 1200 படங்களுக்கு இசையமைத்தும் இவரது திறமை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
 
இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்இ நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.