வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 25 மே 2015 (18:49 IST)

எனது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க்கிறார்கள் - இளையராஜா வருத்தம்

என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறி சில ஆடியோ நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக என்னுடைய ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
 

 
அதன் அடிப்படையில் டி.ஜி.பி. மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு நீதிமன்றத்தின் உத்தரவையும், உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மற்ற எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கின்ற திருட்டு ஆடியோ, வீடியோ சி.டி.களின் விற்பனையை தடுக்க கோரியும் புகார் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பாக ஆடியோ நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம். எஃப்.எம். ரேடியோவில் ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எனது பெயரை என்னுடைய எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
 
என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும். அவர்களிடம் உரிய இழப்பீடும் நீதிமன்றம் மூலமாக பெறப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.