ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் தங்களது வாழ்க்கையின் மிக அழகான தருணத்தை எட்டியுள்ளனர். இத்தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த மகிழ்ச்சியான செய்தியை ராம் சரணின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணமான ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு, ஏற்கனவே 2023-இல் 'கிளின் காரா' என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால் கொனிடெலா குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.
இது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சிரஞ்சீவி, "பேரன், பேத்தியை வரவேற்பது தாத்தா-பாட்டியாக எங்களுக்கு கிடைத்த தெய்வீக ஆசீர்வாதம். தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
