தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில், சுமார் ரூ.250 கோடி மதிப்பில் ஒரு புதிய வீட்டை கட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த வீட்டின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த செயல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதாக குறிப்பிட்டு ஆலியா பட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி குறித்து, ஆலியா பட் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "மும்பை போன்ற நகரங்களில் இடப்பற்றாக்குறை இருப்பது எனக்கு புரிகிறது. சில சமயம் உங்கள் சன்னல் வழியாக அடுத்தவர் வீட்டைப் பார்க்க நேரிடும். ஆனால், அதற்காக யாருடைய தனிப்பட்ட வீட்டையும் படம்பிடித்து, அந்த காணொளிகளை ஆன்லைனில் வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. இன்னும் கட்டுமானப் பணியில் இருக்கும் எங்கள் வீட்டின் காணொளி, எங்களுடைய அனுமதி இல்லாமல் பல ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதுடன், ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினையும் ஆகும். ஒருவரின் தனிப்பட்ட இடத்தை படம்பிடிப்பது, 'உள்ளடக்கம்' அல்ல; அது ஒரு மீறல். இது ஒருபோதும் இயல்பானதாக கருதப்படக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "யோசித்துப் பாருங்கள்: உங்கள் வீட்டிற்குள் எடுக்கப்பட்ட காணொளிகள் உங்கள் அனுமதியில்லாமல் பகிரப்பட்டால் அதை நீங்கள் சகித்துக்கொள்வீர்களா? நாம் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே, ஒரு பணிவான ஆனால் உறுதியான கோரிக்கை: இதுபோன்ற உள்ளடக்கங்களை ஆன்லைனில் கண்டால், தயவுசெய்து அதை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். மேலும், இந்தக்காணொளியை வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கு, உடனடியாக அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆலியா பட் வெளியிட்ட இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran