வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (09:29 IST)

கொக்கி குமார் ரொம்பப் பிடிக்கும் - ஐஸ்வர்யா தனுஷ் பேட்டி

3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷின் அடுத்தப் படம், வை ராஜா வை. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மே 1 உத்தம வில்லன் வெளியாகும் அதேநாளில் படம் திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள். படம் குறித்து ஐஸ்வர்யா சொன்னவை உங்களுக்காக.
தனஷ் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் போது வேறு நிறுவனத்துக்கு படம் செய்ய என்ன காரணம்?
 
என்னுடைய கணவரே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் மூலமாக தயாரிப்பதற்கு காரணம், என்னுடைய சுதந்திரத்திலிருந்து விடுபடுவதற்காகவே. 
 
விளக்கமாக சொல்ல முடியுமா?
 
எங்களுடைய தயாரிப்பில் படம் எடுத்தால் எனக்காக ஒரு சுதந்திரம் இருக்கும். ஆகையால், கதையில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடும். இதுபோன்று மற்ற நிறுவனங்களின் படங்களில் வேலை செய்தால் ஒரு பொறுப்பு இருக்கும்.
 
இதுதான் வுண்டர்பாரில் படம் இயக்காததற்கு காரணமா?
 
அது மட்டுமில்லை. என்னுடைய கதையை கேட்டு ஒரு நிறுவனம் படம் தயாரிக்க வந்தால், அது எனக்குத்தானே பெருமை.
 
படத்தில் தனுஷை நடிக்க வைக்க என்ன காரணம்?
 
தனுஷ் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ‘புதுப்பேட்டை’ படத்தில் அவர் நடித்த ‘கொக்கி குமார்’.  இந்த படத்தில் அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம் இருந்தது. அதற்கு தேவைப்பட்டதால் அவரை நடிக்க வைத்தேன்.
 
உடனே ஒப்புக் கொண்டரா?
 
நான் நடிக்கக் கேட்டபோது அவர் பிஸியாக இந்தி, தமிழில் நடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டதால் பிஸியான நேரத்திலும் என்னுடைய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, அதன்படி நடித்துத் தந்தார்.

படம் முடிய அதிக நாள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே?
 
இந்த படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரம் முடிவடைந்ததற்கு என்னுடைய குழந்தைகள்தான் முக்கிய காரணம். என் குழந்தைகள் என்னுடனே இருக்கவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை.
அவர்கள் மட்டும்தான் காரணமா?
 
என்னுடைய கணவரும், என்னுடைய அம்மாவும் ஒரு காரணம். என்னுடைய அம்மா அவர்களை சரியாக கவனித்துக் கொண்டார். இதனாலேயே படப்பிடிப்பில் கவனம் செலுத்தி, இவ்வளவு சீக்கிரத்தில் படத்தை என்னால் முடிக்க முடிந்தது.
 
படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கிறாரே?
 
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதைப்பற்றி எஸ்.ஜே.சூர்யாவிடம் சொன்னதும் அவர் உடனே நடனம் ஆட ஒப்புக்கொண்டார்.