வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2015 (11:27 IST)

ஈழப் போரின் இறுதியில் நடந்தது என்ன? ஐ.நா. அவையில் அம்பலப்படுத்துகிறது பசுமை தாயகம்: டாக்டர் ராமதாஸ்

ஈழப் போரின் இறுதியில் நடந்து என்ன? என்பது குறித்து, ஐ.நா. அவையில் பசுமை தாயகம் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஐநா மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத் தொடர், தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்புக் கூட்டத்தை, என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடத்துகிறது.
 
ஜூன் 24ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவை அரங்கம் எண் 22ல் இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு, இங்கிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் தலைமை தாங்குகிறார்.
 
மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜானினி கிருஷ்டி பிரிமிலோ, மற்றும் தமிழகத்திலிருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
 
இக்கூட்டத்தைப் பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
 
இக் கூட்டத்தில், மிக முக்கியமான நிகழ்வாக, இலங்கை ராணுவத்தால் சட்ட விரோதமாகக் கொல்லப்பட்டோரின் நெருங்கிய உறவினர்களும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஈழப்போரின் இறுதியில் நடந்தவற்றை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எடுத்துக் கூற உள்ளனர்.
 
இதன் மூலம் இலங்கையின் உண்மை நிலையைப் பன்னாட்டுத் தூதர்கள் உணர இந்தக் கூட்டம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.