ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!
பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென நீக்கப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வங்கதேசம் வாதிடுகிறது. "எங்கள் கோரிக்கை நியாயமானது, போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும்" என்று ஆசிப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்தியாவில் வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும், இந்தியா செல்ல மறுத்தால் மாற்று அணி அறிவிக்கப்படும் என்றும் ஐசிசி 24 மணி நேர எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த மோதல் குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், "ஐசிசி-யின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டை புறக்கணிப்பது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குச் சமம்" என்று சாடியுள்ளார்.
தற்போதைய சூழலில், வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலக கோப்பையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் உலகில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva