அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!
சிட்னியின் பாண்டி கடற்கரையில் 'சானுகா பை தி சீ' நிகழ்வின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதையடுத்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்த தானம் செய்யுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் யூத சமூகத்தினரை இலக்காக கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தொடர்ந்து ரத்த விநியோகம் தேவை என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
பாண்டி கடற்கரையில் நடந்த சம்பவத்தால் தான் உலுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கம்மின்ஸ், "உங்களால் முடிந்தால், தயவுசெய்து ரத்த தானம் செய்ய முன்பதிவு செய்யுங்கள்" என்று சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவ அவசர காலங்களில் அதிகம் தேவைப்படும் O-நெகட்டிவ் ரத்தத்திற்கு ஏஜென்சிகள் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளன. ஏனெனில், தீவிரமான அதிர்ச்சி சம்பவங்களில் ஒரு உயிரை காப்பாற்ற 100 யூனிட் ரத்தம் வரை தேவைப்படலாம். கம்மின்ஸின் சக வீரர் உஸ்மான் கவாஜா உட்பட கிரிக்கெட் உலகமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
Edited by Siva