செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (14:31 IST)

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

உலகளவில் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பாலோன் டி’ஓர் எனப்படும் தங்க பந்து விருதை ஆறாவது முறையாக பெற்றிருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

உலகளவில் அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும் முக்கியமானவர்கள். ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு பாரிஸில் பாலோன் டி’ஓர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை பெறுவதில் கடந்த 10 வருடங்களாக மெஸ்ஸிக்கும், ரொனால்டோவுக்கும் இடையே பெறும் போட்டி நிலவி வந்தது. ஒவ்வொரு முறை பாலோன் டி’ஓர் விருதின் போதும் இருதரப்பு ரசிகர்களும் இணையத்தில் தீவிரமான ரகளையில் ஈடுபடுவர்.

இந்நிலையில் நேற்று பாரிஸில் நடந்த நிகழ்ச்சியில் அர்ஜெண்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸிக்கு பாலோன் டி’ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரொனால்டோ இந்த விருதை 5 முறை பெற்றிருக்கிறார். 2009 முதல் 2012 வரை தொடர்ந்து இந்த விருதை 4 முறை பெற்று சாதனை படைத்தவர் லியோனல் மெஸ்ஸி. இப்படியாக இருவரும் தொடர்ந்து 5 முறை இந்த விருதை பெற்றிருந்தார்கள்.

சென்ற ஆண்டு யார் இந்த விருதை பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் கொடுக்காமல் க்ரோஷிய வீரர் லூக்கா மோட்ரிக்கிற்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.

இந்த வருடம் பாலோன் டி’ஓர் விருதை பெற்றதன் மூலம் மொத்தம் ஆறு முறை விருது வென்று போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் மெஸ்ஸி. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.