இந்த டிராமா எல்லாம் என்கிட்ட பலிக்காது: வங்கதேசம், பாகிஸ்தானுக்கு ஜெய்ஷா கொடுத்த சாட்டையடி..!
2026 டி20 உலகக்கோப்பையில் பாதுகாப்பு காரணங்களை கூறி இந்தியா வர மறுத்த வங்கதேசம், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுதிமொழிகளையும் மீறி வங்கதேசம் பிடிவாதம் காட்டியதால், அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் முதலில் புறக்கணிப்பு மிரட்டல் விடுத்து பின்னர் பின்வாங்கியது. இந்த நாடகங்கள் குறித்து மௌனம் கலைத்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா, "எந்தவொரு தனிப்பட்ட அணியும் அமைப்பை விட பெரியது அல்ல" என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட அணியால் உலகக்கோப்பையின் வெற்றியையோ அல்லது அமைப்பின் கௌரவத்தையோ தடுத்துவிட முடியாது என்றார்.
மேலும், இந்த உலகக் கோப்பை 7.2 மில்லியன் நேரடி பார்வையாளர்களுடன் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து அணிகளின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய அவர், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கினார். உச்சியை அடைவதை விட அங்கேயே நிலைத்திருப்பது கடினம் என்றும், 2036 வரையிலான எதிர்கால தொடர்களுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Edited by Siva