வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : மீனம்

FILE
தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள் தான். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் போவதில் உங்களுக்கு உடன்பாடில்லை. ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாவப்போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள். அதனால்தான் கிடைத்த சந்தப்பத்தை பயன்படுத்தி எல்லோருக்கும் இருப்பதைக் கொடுப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த நந்தன வருடம் தொடங்குவதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்‌கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். என்றாலும் ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதத்தில் அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.

வரவேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கி இருந்த கடனை தந்து முடிப்பீர்கள். தலை சுற்றல், வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 6-ம் வீட்டில் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு உங்களின் மாறுபட்ட அணுகுமுறையாலும், விட்டுக் கொடுத்து போகும் போக்காலும் உடனடி தீர்வு கிட்டும். எதிர்த்தவர்கள் மனம் திருந்தி வலிய வந்து பேசுவார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில் முடியும். மூச்சுத் திணறல், தூக்கமின்மை வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு செலவினங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் பகைமை வரக் கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.

அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். யாரிடம் எப்படிப் பேசுவது, நடந்து கொள்வது என்ற அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களுக்கு கை காசைப் போட்டு செலவு செய்வதுடன், தலைமையும் தாங்குவீர்கள். தட்டில் சாப்பாடு இருந்தும் நிம்மதியாக சாப்பிடமுடியாதபடி தினந்தோறும் ஒரு பிரச்சனையை சந்தித்தீர்களே! இனி நிம்மதியாக சாப்பிடுவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை ஆடம்பரமாக ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், டென்ஷன், வீண் கவலைகள் வந்துப் போகும். மனைவியின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனைவிவழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். இனி எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ளவேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

12.9.2012 முதல் அஷ்டமத்துச்சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்விமனப்பான்மை, வீண்பழி வந்துப் போகும். பணப்பற்றாக்குறை, கணவன்-மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் வரும். சில சமயங்களில் பெரிய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும். என்றாலும் பதட்டம் வேண்டாம்.

2.12.2012 முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டிற்கு வருவதால் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். எட்டாம் வீட்டிற்கு ராகு வருவதால் திடீர் பயணங்கள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். தந்தையாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பெற வாய்ப்புகள் வரும். தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரை பகைத்துக் கொள்ள வேண்டாம். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.

மாணவர்களே! உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

வியாபாரிகளே! போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததே! இனி கணிசமான லாபம் உண்டு. கம்யூனிகேஷன், புத்தகம், உணவு போன்ற புதுத்துறையிலும் கால் பதிப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். சனியின் போக்கு சரியில்லாதனால் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சிலர் பங்குதாரர்களை விட்டு பிரிய வேண்டியது வரும்.

கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தபட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று வரவு அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். புரோக்கரேஜ், ஹோட்டல், எலட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கணினி துறையினர்களே! அனாவசியமாக விடுப்பில் செல்ல வேண்டாம். கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். உங்களுக்கு எதிராக சிலர் குற்றம் சுமர்த்தினாலும் அதில் மீண்டு வருவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும். உட்கட்சி பூசலில் தலையிடாதீர்கள். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள்.

கலைஞர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.

விவசாயிகளே! கடன் தொல்லையால் நிம்மதி இழந்தீர்களே! பயிரைத் தாக்கிய பூச்சித் தொல்லை இனி இருக்காது. பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும்.

ஆகமொத்தம் இந்த தமிழ் புத்தாண்டு திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தையும் கடைபிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:
ஸ்ரீஆஞ்சநேயர். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.