1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (12:53 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

உழைப்பால் சாதிப்பவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்கவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பிகளுடனான பகைமை விலகும். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்குவீர்கள்.

என்றாலும் நீங்கள் கொஞ்சம் முன்எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதுடன், கொஞ்சம் கடினமாகத் தான் உழைக்க வேண்டி வரும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் நடத்தை கோலங்கள் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அதேப் போல முறையான அரசாங்க அனுமதியின்றி கூடுதல் தளமோ, அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து இடத்தை விரிவுப்படுத்தி வீடு கட்டுவதோ அல்லது கடையை விரிவுப்படுத்துவதோ வேண்டாம். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தின் பொருட்டு அல்லது கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகளால் பிரிவுகள் ஏற்படக்கூடும். உங்களின் கோபதாபங்களையும், கூடாப்பழக்க வழக்கங்களையும் உங்கள் மனைவி சில சமயங்களில் சுட்டிக் காட்டுவார்.

அதற்காக அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ளாமல் திருத்திக் கொள்வது நல்லது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு, இருக்கும் ஊரை விட்டு அல்லது நாட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. 
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி காட்டாமல் அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். உணவு விஷயங்களில் நாக்கை கட்டுபடுத்துங்கள். எந்த வேலையை செய்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சிலர் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் அல்லது எல்லைப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.   
 
உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். பகட்டிற்காகவும், கௌரவத்திற்காகவும் வீண் செலவுகள் செய்துக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். 
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். கோவில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சிலர் காரியம் ஆகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் ஆனப் பிறகு கறிவேப்பில்லையாக தூக்கி எறிகிறார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி முன்னேறுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலைத் தருவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.  
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தர முடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சோப்பு, ஷாம்புவை மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.      
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தாயாருடன் வீண் விவாதங்கள், அவருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.   
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமண விஷயத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்து விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். பெற்றோருடனான மனவருத்தம் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீட்டில் கூடுதலாக அரை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாக தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் ஃபோன் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் பரவும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 
 
வியாபாரிகளே! கண்ட படி கடன் வாங்கி தொழிலை விரிபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே! அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப்பாருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு, வாயில் தோசை என்று கறாராக இருங்கள். இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் யோசித்து சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து பிறகு கையப்பமிடுவது நல்லது. அவசரப்பட வேண்டாம். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களை முழுமையாக நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளையும், விளம்பர யுக்திகளையும் கையாளுவது நல்லது. 
 
உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். மறைமுகப் பிரச்னைகளும் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். குருபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும், அவற்றை முறியடித்துவிடுவீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது.      
 
கன்னிப்பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். தாயாருடன் விட்டுக் கொடுத்து போங்கள். பெற்றோரைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வேற்றுமாநிலத்தில், வெளிநாடு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நயமாகப் பேசுபவர்களையெல்லாம் நம்பி ஏமாற வேண்டாம்.   
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் சந்தேகங்களையெல்லாம் ஆசிரியரிடம் கேட்க தயங்க வேண்டாம். உங்களுடைய மொழியறிவுத் திறன், பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். உயர்கல்விக்காக எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சற்று தள்ளிப் போகும். வேற்றுமொழி வாய்ப்புகளால் பிரபலமாவீர்கள்.  
 
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர்-அந்திலி கிராமம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.